Skip to content

அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தபோது சந்திக்காமல் டெல்லி சென்று சந்தித்தது ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

டெல்லி,ஜன.08; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்கவில்லை. ஆனால், அதன் பிறகு திடீரென டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சந்திக்காததன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டிற்கு அமித் ஷா இரண்டு நாள் பயணமாக வந்திருந்தபோது, திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த சமயத்தில் வேறு நிகழ்ச்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அவற்றை ரத்து செய்ய முடியாது என்பதாலும், தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மூலம் நடைபெற்று வந்ததாலும், தமிழ்நாட்டில் சந்திப்பு நிகழவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லி பயணம் மற்றும் அமித் ஷா சந்திப்பு

தமிழ்நாட்டில் சந்திக்க முடியாத சூழலில், பாமக உடனான கூட்டணி உறுதியான கையோடு எடப்பாடி பழனிசாமி டெல்லி விரைந்தார். அங்கு அமித் ஷாவை நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

கூட்டணி உறுதி: அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

தொகுதிப் பங்கீடு: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் பாமகவிற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கோரிக்கைகள்: முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டின் நீர்நிலைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

“தமிழ்நாடு அரசியல் குறித்து கேட்டறிந்தார் அமித்ஷா’

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததாகவும், 2026-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியே வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்; திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம் என இபிஎஸ் கூறினார்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த வாக்குறுதி என்னவானது?

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்று எடப்பாடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என முந்தைய தேர்தலின்போது திமுக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக அவர் விமர்சித்தார்.

அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டது திமுக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் புதிதாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது; மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை; பெயரை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *