டெல்லி,பிப்.20; இந்தியாவில் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மின்சார ஒழுங்குமுறை விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இலவச கலாச்சாரம் குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.
இலவச மின்சாரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாநில அரசின் இலவச மின்சாரத் திட்டத்தைக் கடுமையாகச் சாடியது. “ஏழை எளிய மக்களுக்கு உதவுவது அரசின் கடமை, ஆனால் வசதி படைத்தவர்களுக்கும் இலவசம் வழங்குவது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும்போது, இத்தகைய இலவசங்களை வழங்குவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கும் என எச்சரித்தனர். “இலவச உணவு, இலவச சைக்கிள், இலவச மின்சாரம் என அனைத்தையும் இலவசமாக வழங்கினால், மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்; இது உழைப்பு கலாசாரத்தை சீர்குலைக்கும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரிப்பணம் யாருடையது?
அரசு வழங்கும் இந்த ‘இலவசங்கள்’ உண்மையில் இலவசமானவை அல்ல என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “அரசு இதற்கான தொகையைச் செலுத்துவதாகக் கூறுகிறது. ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அது பொதுமக்களின் வரிப்பணம் அல்லவா?” என்று வினவிய நீதிபதிகள், திட்டமிட்ட நிதி ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அறிவுறுத்தினர்.
தேர்தல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்படுகிறதா இலவசத் திட்டங்கள்?
தேர்தல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள், மாநிலங்களின் நிதி நிலைமையை மோசமாக்குவதோடு மட்டுமல்லாமல், தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையும் முடக்குகின்றன. தகுதியுடையவர்களுக்கு மட்டும் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகு என்பதை உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துகள் உணர்த்துகின்றன.
