வாஷிங்டன்,ஜன.12; ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் தனது எல்லையைத் தாண்டிவிட்டதாகவும், அமெரிக்க ராணுவம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டமும் உயிரிழப்புகளும்
ஈரானின் முக்கிய நகரங்களான டெஹ்ரான் மற்றும் மஷாத் உட்பட நாடு
முழுவதும் போராட்டங்கள் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வருகின்றன. பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான இந்தக் கிளர்ச்சியில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்பின் ‘சிவப்பு கோடு’ எச்சரிக்கை
ஏர்ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரான் ஏற்கனவே சிவப்பு கோட்டைத் தாண்டிவிட்டதாகத் தெரிகிறது. போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான ராணுவ ரீதியிலான சில தீவிரமான வாய்ப்புகளை (Strong Options) நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று கூறினார். விரைவில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஈரானின் பதிலடி மற்றும் அச்சுறுத்தல்
டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் பேசுகையில், “அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை எங்கள் இலக்காக மாறும்” என்று எச்சரித்தார்.
மேலும், ஈரான் அரசு இந்தப் போராட்டங்களை “பயங்கரவாதம்” என்று வர்ணிப்பதோடு, கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என்ற சமிக்ஞையையும் வெளியிட்டுள்ளது.
ஈரான் போராட்டம் சர்வதேச தாக்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா – ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இணைய முடக்கம் மற்றும் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரானிய மக்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் போராரட்டம் சர்வதேச போராக மாறும் என அச்சம்
ஈரானின் உள்நாட்டுப் போராட்டம் தற்போது சர்வதேசப் போராக மாறும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால், மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள் அணிவகுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
