Skip to content

ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? – செல்வப்பெருந்தகை விளாசல்!

சென்னை,ஜன.05; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை மற்றும் அவரது விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக அரசின் ஊழல்கள் மற்றும் பொருளாதார தோல்விகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

அமித்ஷாவின் தமிழக வருகையும் பாஜகவின் அரசியலும்

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத விரக்தியில் பாஜக இருப்பதாக செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் நோக்கில் அமித்ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக மிகவும் வலுவாக இருப்பதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பம்

“தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என அமித்ஷா பேசினாலும், அதே மேடையில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை என்பதை செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதையும், அமித்ஷா, மோடி தலைமையில் அணிவகுப்போம் எனக் கூறுவதையும் குறிப்பிட்டு, இந்தக் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள்: ‘சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது’

பாஜக அரசு தேர்தல் பத்திர நன்கொடை மற்றும் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றிருப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்த ரூ.6,000 கோடி லஞ்சம்

தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்ட நன்கொடையில் 83.6% தொகையை பாஜக மட்டுமே பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ₹6,088 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் சலுகைகளை அடையும் நிறுவனங்களிடம் இவ்வாறு நிதி பெறுவது அப்பட்டமான ஊழல் என்றும், இதை மறைத்துவிட்டு ஊழலைப் பற்றிப் பேச அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியும் இந்தியாவின் நிலையும்

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கடன் சுமை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அவர் சாடினார்:

டிசம்பர் 2025 நிலவரப்படி மத்திய அரசின் மொத்த கடன் ₹200 லட்சம் கோடி.

கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் பாஜக அரசு ₹145 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் சராசரியாக ₹1.40 லட்சம் கடன் சுமை உள்ளது.

மேலும், உலக வறுமைக் குறியீடு (102-வது இடம்), மனித வளர்ச்சி குறியீடு (134-வது இடம்) மற்றும் பத்திரிகை சுதந்திரம் (162-வது இடம்) ஆகியவற்றில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் பாஜகவின் முட்டுக்கட்டை

மத்திய அரசின் தோல்விகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 16% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 1.6 மடங்கு அதிகம் என்பதை சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல் பாஜக அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

“அமித்ஷாவின் பேச்சுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டர்”

அமித்ஷாவின் பேச்சுகள் வெறும் அரசியல் நாடகம் என்றும், தமிழக மக்கள் பாஜகவின் இத்தகைய உத்திகளை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மக்கள் ஆதரவோடு வளர்ச்சிப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதே அவரது கருத்தின் சாரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *