சேலம்,ஜன.29; அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று, எடப்பாடி பழினிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைய நான் தயார்…இபிஎஸ் என்ன சொல்வார்?
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (29.01.2026) ஆலோசனை நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடந்த இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “அதிமுகவில் இணைய நான் தயார்; டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா” எனக் கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ்-ஐ நீக்கிய முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுத்தது
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் (ஓபிஎஸ்) கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்; எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை; ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை” என்றும் பதிலளித்தார்.
‘ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை’
‘இதுபற்றி நான் பலமுறை சொல்லிவிட்டேன்; அவர் 4 வருடமாக கட்சியில் இணைய வேண்டும் என கேட்டுகிறார்; அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்; எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு: இபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்த எடுத்த முடிவின்படி, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு இது.
“வரும் தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும்”
வரவிருக்கும் தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.