சென்னை,மார்ச்.06; தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார். “கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்பது போல, தவெகவின் கூட்டணிக் கதவை திறந்து வைத்திருந்தபோதிலும் இதுவரை யாரும் வந்து தட்டவில்லை. எனவே, விஜய் வீசியதாக கூறப்படும் “அரசியல் வெடிகுண்டு” (Political Bomb) நமத்துப் போய்விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பிசுபிசுத்துப்போன கொள்கை எதிரி, அரசியல் எதிரி பிரகடனம்!!
தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்த 2024ஆம் ஆண்டு (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் பிரகடனம் செய்தார். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று மக்களுக்கும் புரியவில்லை, விஜய்யாலும் தெளிவுபடுத்த முடியவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் வெடிகுண்டு!
அப்போது “தவெகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்” என்றும் அறிவித்தார். அச்சமயம் தமிழ்நாடு அரசியலில் இது ஒரு புதிய முன்னெடுப்பு என பரவலாகப் பேசப்பட்டது. தவெக-வினர் அதை ‘பொலிட்டிக்கல் பாம்’, அதாவது ‘அரசியல் வெடிகுண்டு’ என்று கொண்டாடினார்கள்.
தமிழ்நாடு அரசியலைப் பொருத்தமட்டில், பொதுவாக பெரிய கட்சிகள் கூட்டணியை ஏற்றுக்கொண்டாலும், ஆட்சியில் பங்குதர முன்வருவது கிடையாது.
கடைசியில் ‘பொலிடிக்கல் பாம்’ வெடிக்கவே இல்லையே?
அப்போது விஜய் வீசிய அந்த அரசியல் ‘வெடிகுண்டு’ பயங்கரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது நமத்துப் போய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“திமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தன் பக்கம் இழுக்கவே விஜய் இப்படி ஒரு மிகப்பெரிய திட்டத்தையே கையிலெடுத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாகத்தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் கூறினார்.
விஜய்-க்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பது புதிர்!
அதிகாரப் பகிர்வு என்னும் தூண்டிலைப் போட்டு கட்சிகளை தன் பக்கம் இழுக்கலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால், ஒரு தேர்தலில் கூட களம் கண்டிராத விஜய்யின் வாக்கு வங்கி எந்தளவிற்கு இருக்கும் என்பது புதிராகவே இருப்பதால், எந்தக் கட்சியும் பனையூர் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரும் என தவெக பெரிதும் நம்பியது. துணை முதலமைச்சர் பதவி, 70 சீட் என்றெல்லாம் வலைவீசினர் பனையூர் வாசிகள்.
பேசுபொருளான பிரவீன் சக்கரவர்த்தி-விஜய் சந்திப்பு
ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் கூட விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும்,
டெல்லி அரசியலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்தது. முடிவில், திமுக-வுடனேயே தொடரலாம் என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து கூட்டணியை உறுதிப்படுத்தியது. புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே தவெக-வுக்கு ஆதரவு (!!!)தெரிவித்துள்ளார். இதனால் விஜய்யின் ‘அரசியல் வெடிகுண்டு’ நமத்துப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் என்கின்றனர், அரசியலை ஆழமாக உற்றுநோக்குபவர்கள்.
ஆட்சியில் அதிகாரம் என்பது கூட்டணிக்காக அல்ல…!!
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் அளித்த விளக்கம் விநோதமாக உள்ளது. அதாவது,“அதிகாரத்தில் பங்கு என்று சொன்னது கூட்டணிக்காக அல்ல, அது மக்களின் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைப்பதற்கான ஜனநாயகப் பண்பு; மற்ற கட்சிகள் வராவிட்டாலும், தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்; 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன; நாங்கள்தான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம்” எனக் கூறுகின்றனர். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை குறைகூற முடியாது.
