Skip to content

கிரிக்கெட் வாரியத்தை விளாசும் எல். சிவராமகிருஷ்ணன்; 23 ஆண்டுக்காலமாக புறக்கணிப்பு எனக் குமுறல் – வர்ணனையாளர் பதவியிலிருந்து விலகல்!

டெல்லி,மார்ச்.20; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பிரபல வர்ணனையாளருமான எல்.சிவராமகிருஷ்ணன், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக தன்னை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயமரியாதை முக்கியம்: வர்ணனையாளர் பதவியிலிருந்து விலகல்

60 வயதான எல். சிவராமகிருஷ்ணன், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது ஓய்வை அறிவித்தார். “நான் கிரிக்கெட் வாரிய வர்ணனைப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று பதிவிட்ட அவர், அதற்கான காரணத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். “எனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்து யாருக்கும் அடிபணிய என்னால் முடியாத,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

23 ஆண்டுகால ஆதங்கம்: டாஸ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளில் புறக்கணிப்பு

தனது நீண்ட கால அனுபவத்தைக் குறிப்பிட்ட சிவராமகிருஷ்ணன், கடந்த 23 ஆண்டுகளாக தமக்கு ‘டாஸ்’ (Toss) மற்றும் ‘பரிசளிப்பு விழா’ (Presentation) போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “23 ஆண்டுகளாக எனக்கு டாஸ் அல்லது பரிசளிக்கும் பணிகள் வழங்கப்படவில்லை; ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது கூட, புதிதாக வந்தவர்களுக்கு பிட்ச் ரிப்போர்ட் மற்றும் டாஸ் பணிகள் வழங்கப்பட்டன; இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஹர்ஷா போக்லே மற்றும் ரவி சாஸ்திரி போன்றோருக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தமக்கு மறுக்கப்படுவதாக அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிஜமான அதிர்ச்சி இனிமேல் தான்: சிவராமகிருஷ்ணன் எச்சரிக்கை

தமது ஓய்வு என்பது ஒரு கதையின் ஆரம்பம் மட்டுமே என்று கூறியுள்ள சிவராமகிருஷ்ணன், “உண்மையான தகவல்கள் வெளியே வரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைவார்கள்; கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கூட இதை நம்ப மறுக்கும் அளவுக்கு உண்மைகள் இருக்கும்” என்று அதிரடி கிளப்பியுள்ளார்.

தன்னை வெறுப்பவர்கள் இந்த முடிவால் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், ஆனால் தன் மீது மதிப்புக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகினரின் எதிர்வினை

சிவராமகிருஷ்ணனின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், “ஓ இல்லை! இந்த ஐபிஎல் தொடரில் நீங்கள் ஏன் இல்லை?” என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த எல். சிவராமகிருஷ்ணன் இந்தியாவுக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 1985 உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியூட்டும் உண்மைகள் என்னவாக இருக்கும்?

இந்திய கிரிக்கெட் வர்ணனைத் துறையில் பல தசாப்தங்களாகப் பணியாற்றிய ஒரு மூத்த வீரர், நிர்வாகத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிவராமகிருஷ்ணன் கூறப்போகும் அந்த “அதிர்ச்சியூட்டும் உண்மைகள்” என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *