கெங்கவல்லி (தனித்) தொகுதி (எண் – 81)
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி தொகுதி, 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.
பட்டியலினத்தவருக்கான இந்தத் தொகுதி, 2011 முதல் மூன்று தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில் தேமுதிக ஒரு முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளன.
இங்கு பட்டியலினத்தவர் குறிப்பாக பறையர் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், உடையார், நாயக்கர் என பல்வேறு சமூகத்தினரும் பரவலாக இருக்கின்றனர். இவர்கள் தவிர, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கணிசமாக வாழ்கின்றனர்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போதைய எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட கவுன்சிலர் சந்திரகலா ஆகியோர் சீட்டுக்கு மெனக்கெடுகின்றனர்.
சளைக்காமல் 3ஆவது முறையாக களமிறங்கும் ரேகா பிரியதர்ஷினி!
திமுகவில், மூன்றாவது முறையாக ரேகா பிரியதர்ஷினிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவிருப்பதாக பேசப்படுகிறது.
அதேவேளையில், கடந்த தேர்தலில் ஆத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட சின்னதுரை, இம்முறை கெங்கவல்லி தொகுதியை குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தவெகவால் வாக்குகள் சிதறும்!அதிமுக-திமுக இடையே அக்கப்போர்
முந்தைய தேர்தலில், அதிமுகவின் நல்லதம்பி 90,000 வாக்குகளைப் பெற்று வென்றார். திமுகவின் ரேகா பிரியதர்ஷனிக்கு 82,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் இரா. வினோதினிக்கு சுமார் 9,000 வாக்குகளும் கிடைத்தன.
வரும் தேர்தலில் தவெகவின் வருகை பிற கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் எனப் பேசிக் கொள்கின்றனர்.
ஆனாலும், கெங்கவல்லி தொகுதியில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.