கோவளம்,ஜன.02; செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவளம் கடற்கரை, தற்போது ஒரு முரண்பாடான நிலையில் காட்சியளிக்கிறது. ஒருபுறம் சர்வதேசத் தரத்துடன் மின்னும் ‘புளூ பிளாக்’ (Blue Flag) கடற்கரை, மறுபுறம் பிளாஸ்டிக் கழிவுகளும் அழுக்கும் நிறைந்த சாதாரண கடற்கரை என இரண்டு வேறுபட்ட உலகங்களை ஒரே இடத்தில் காண முடிகிறது.
சர்வதேச அந்தஸ்தும் உள்ளூர் அவலமும்
கோவளம் கடற்கரையின் ஒரு பகுதி, அதன் தூய்மை மற்றும் பாதுகாப்பில் சர்வதேச ‘புளூ பிளாக்’ சான்றிதழைப் பெற்றுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஆனால், அதற்கு மிக அருகிலேயே உள்ள ‘கோவளம் வீக்கெண்ட் வியூ பாயிண்ட்’ (Kovalam Weekend View Point) பகுதி குப்பைகளால் சூழப்பட்டு, காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது.
புளூ ஃபிளாக் என்றால் என்ன?
புளூ ஃபிளாக் கடற்கரை என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் சான்றளிக்கப்பட்ட கடற்கரை ஆகும். இது நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கல்விக்கான உயர் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த கடற்கரைகள் சுத்தமான நீர், கழிப்பறைகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற வசதிகளுடன் சுத்தமான, பாதுகாப்பான சூழல்களை வழங்குகின்றன, நிலையான சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன.
குப்பைகளால் மூச்சுத்திணறும் கடற்கரை
சமீபத்திய மழையினால் கடலில் இருந்து அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காய்ந்த மீன்கள், தேவையற்ற செடிகள் மற்றும் மதுப் பாட்டில்கள் கடற்கரை மணல் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன.
முக்கியமான பிரச்னைகள்:
பிளாஸ்டிக் கழிவுகள்: கடல் அலைகளுடன் பிளாஸ்டிக் பைகள் மிதப்பதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க அச்சப்படுகின்றனர்.
ஆமையின் உடல்: சமீபத்தில் கரை ஒதுங்கிய ஒரு ஆமையின் உடல் கூட இன்னும் அகற்றப்படாமல் இருப்பது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
பராமரிப்பு இன்மை: தனியார் ஓட்டல்கள் மற்றும் புளூ ஃபிளாக் நிர்வாகம் தங்களுக்குரிய பகுதியை மட்டும் சுத்தம் செய்வதாகவும், பொதுப் பகுதியை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்றும் புகார்கள் எழுகின்றன.
அதிகாரிகளின் பதில் என்ன?
இந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி. சினேகா அவர்களிடம் கேட்டபோது, “உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. சுட்டிக்காட்டப்பட்ட இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
ஒருபுறம் கோடிக்கணக்கில் செலவு; மறுபுறம் பராமரிப்பின்றி கிடக்கும்அவலம்
சுற்றுலாவை மேம்படுத்த அரசு ஒருபுறம் கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நிலையில், பராமரிப்பின்றி கிடக்கும் இது போன்ற இடங்கள் சென்னையின் அழகைக் குலைக்கின்றன. ‘புளூ ஃபிளாக்’ பகுதிக்குக் காட்டும் அதே அக்கறையை, சாதாரண மக்களும் குழந்தைகளும் விளையாடும் பொதுக் கடற்கரைக்கும் காட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
