Skip to content

சட்டப்பேரவைத் தேர்தல்; எதிரிக்கு எதிரி நண்பன்..!: பழைய ஃபார்முலாவை கையிலெடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்?


சென்னை,பிப்.21; தமிழ்நாடு அரசியல் களம் தேர்தலை நோக்கி வேகமெடுத்துள்ள நிலையில், காட்சிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன. அதனை உறுதி செய்யும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ள அதிரடி அரசியல் நகர்வு, தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான அவரது சந்திப்பு, அ.தி.மு.க வட்டாரத்திலும் தி.மு.க முகாமிலும் உற்று நோக்கப்படுகிறது.

திடீர் சந்திப்பும் அரசியல் பரபரப்பும்

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ‘அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்குக் கதவுகளை முழுமையாக அடைத்துவிட்டது. இந்தச் சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, தி.மு.க ஆட்சியின் 5 ஆண்டு சாதனைகளைப் பாராட்டி ஓ.பி.எஸ் பூங்கொத்து வழங்கியது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

பழைய பார்முலாவும் புதிய வியூகமும்

“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்ற சொல்வார்கள். அதற்கேற்ப ஓ.பி.எஸ் இப்போது ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற பழைய சூத்திரத்தைக் கையில் எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாகப் பழிவாங்கவும், தனது ஆதரவாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் அவர் தி.மு.க-வை நோக்கி நகர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

2026 தேர்தலில் ஓ.பி.எஸ் போட்டியிடவில்லையா?

இந்தச் சந்திப்பு தொடர்பாக சில முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன:
வாரிசு அரசியல்: தனது மகன் ஜெய பிரதீப்பிற்குத் தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட தி.மு.க சார்பில் வாய்ப்பு கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் முடிவு: தி.மு.க-விற்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்தாலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னடைவா அல்லது பழிவாங்கலா?

கடந்த 1996 முதல் நகர்மன்றத் தலைவர், அமைச்சர், 3 முறை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எனப் பல பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ், தற்போது தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளார். அ.தி.மு.க-வுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வாய்ப்பைத் தடுப்பதே ஓ.பி.எஸ்-இன் முதன்மை இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் ‘யு-டர்ன்’ அதிமுகவுக்கு பாதகமாக மாறுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த ‘யு-டர்ன்’ (U-turn) அரசியல், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தி.மு.க-வுடன் கைகோர்ப்பதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கை அவர் தக்கவைத்துக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *