சென்னை,மார்ச்.15; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் என தேர்தலுக்கான முன்னெடுப்புகளில் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அதிமுகவின் ஆட்சி மன்றக்குழுவை திருத்தி அமைத்து அறிவிப்பு
இதுபோன்ற சூழலில், அதிமுகவின் ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்தும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்தும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக ஆட்சி மன்றக் குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. அதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பா. வளர்மதி, அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் பி. வேணுகோபால், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், அதிமுஅக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக அதிமுக சார்பில் பல்வேறு குழுக்கள் அறிவிப்பு
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் பல்வேறு குழுக்களையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுக் குழு: அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரசாரக் குழு: தேர்தல் பிரசாரப் பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பிரசாரக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்,செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கோகுல இந்திரா, பா.பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, முன்னாள் சபாநாயகர் ப. தனபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விளம்பரக் குழு மற்றும் சட்டக்குழுவும் அறிவிப்பு
விளம்பரக் குழு: தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் விளம்பரக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ். அப்துல் ரஹீம், வி.எம்.ராஜலெட்சுமி, மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டக் குழு: தேர்தல் சம்பந்தமான சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சட்டக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் பாபுமுருகவேல், இ.பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகங்களை சந்திக்கும் குழுவையும் அறிவித்தார் இபிஎஸ்
ஊடகங்களை சந்திக்கும் குழு: ஊடகவியலாளர்கள்/செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டி. ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன், மாஃபா. பாண்டியராஜன். இளைஞர் பாசறை செயலாளர் வி.பி.பி. பரமசிவம், செய்தித் தொடர்பாளர் ச. கல்யாணசுந்தரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
