தைலாபுரம்,பிப்.25; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், விருப்பமனு விநியோகம் என அரசியல் கட்சிகள் மூழ்கிக் கிடக்கின்றன.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாள்தோறும் நடந்து வருகின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக-பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட பாமக (அன்புமணி அணி)
அக்கூட்டணியில் உள்ள பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இதுவரை தெரியவில்லை.
அன்புமணி அதிமுக-பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அவரது தந்தை ராமதாஸ் எந்த அணியில் இணைவது என்பது குறித்து குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
யாருடன் கூட்டணி என்பதில் ராமதாஸ் பெரும் குழப்பம்
இதுபோன்ற சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ராமதாஸ் நாளை (பிப்ரவரி 26, வியாழன்) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
கூட்டணி குறித்து நாளை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
இந்நிலையில், ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், “கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் அடையவே முடியாது; நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது; அதில் தான் பயணிக்கப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் கூட்டணி குறித்து அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
