சென்னை,மார்ச்.09; மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தேவை மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் நோக்கில், இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான கால இடைவெளி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
25 நாட்களாக உயர்ந்த முன்பதிவு இடைவெளி
இதற்கு முன்பு, ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்த 21 நாட்களுக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது இந்த கால வரம்பை 25 நாட்களாக உயர்த்தி மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?
சமீபகாலமாக வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறையில் அதீத வேகம் காணப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக சராசரியாக 55 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்தவர்கள், தற்போது வெறும் 15 நாட்களிலேயே முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் அதிக அளவில் சிலிண்டர்களைச் சேமிக்க (Hoarding) முயல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தவும் இந்த 25 நாள் இடைவெளி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை
வணிக பயன்பாட்டுக்கான (Commercial) சிலிண்டர் இணைப்புகளை விட, வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கு தடையின்றி சிலிண்டர் பெறுவதை உறுதி செய்ய இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் ஒத்துழைப்பு
இந்தியாவின் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அரசு வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன.
25 நாள் கால வரம்பு முறையற்ற சேமிப்பை தவிர்க்க உதவும்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மக்களிடையே ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய 25 நாள் கால வரம்பு முறையற்ற சேமிப்பைத் தவிர்க்க உதவும். இருப்பினும், பெரிய குடும்பங்கள் மற்றும் அதிக எரிவாயு தேவைப்படும் வீடுகளுக்கு இது சவாலாக இருக்கலாம். தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும்.
