மதுரை,மார்ச்.23; தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இன்று (மார்ச் 23, 2026) தீர்ப்பளிக்கிறது. சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வருகிறது.
வழக்கின் பின்னணி: ஒரு கருப்புப் பக்கம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜூம், அவரது மகன் பெனிக்ஸும் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா முழு முடக்கத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தந்தை, மகன் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டதில் மரணம்
அங்கு தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸார் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் முதலில் பெனிக்ஸ், பின்னர் ஜெயராஜ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்
இந்த இரட்டை காவல் நிலைய மரணம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
காவல்துறையினர் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு
இதையடுத்து சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், காவலர்கள் முத்து ராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சிறையில்…
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தள்ளுபடி செய்யப்பட்டன. கைதான நாளிலிருந்து அவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. கால அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசாரணை நீதிமன்றம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கி கடந்தாண்டு நவம்பர் 26-ல் உத்தரவிட்டது.
5 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெளியாகிறது தீர்ப்பு
இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை வேகமெடுத்து, நாள்தோறும் விசாரணை நடந்தது. இதுவரை அரசுத் தரப்பில் 52 சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
271 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. லத்தி உள்ளிட்ட 57 சாட்சியப் பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 23) மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
நீதித்துறை மீதான எதிர்பார்ப்பு
இந்த வழக்கு இந்தியாவில் ‘காவல் நிலைய மரணங்கள்’ (Custodial Deaths) குறித்த விவாதத்தை உலக அளவில் கொண்டு சென்றது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்
சாத்தான்குளம் சம்பவம் என்பது காவல்துறை அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் இன்று வெளியாகவிருக்கும் தீர்ப்பு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நிகழாமல் தடுக்க ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
