தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், குறிப்பாகச் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து அவர் முன்வைத்துள்ள கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், 17 வயது மதிக்கத்தக்க நான்கு சிறுவர்கள் கையில் கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த சுராஜ் என்ற வடமாநில இளைஞர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
கஞ்சா போதையில் சிறுவர்கள்?
இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய சிறுவர்களின் கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் இவ்வளவு துணிச்சலாகப் பொதுவெளியில் ஆயுதங்களுடன் சுற்றுவதற்கும், போதைப்பொருள் புழக்கத்திற்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மாநிலத்தின் எதிர்காலத் தூண்களாக இருக்க வேண்டிய சிறுவர்கள், போதைக்கும் வன்முறைக்கும் அடிமையாகி வருவதைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ், “சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதலமைச்சர் தானே?” என்று நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மேடைகளில் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, நிஜத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக வலியுறுத்தும் கோரிக்கைகள்:
கடுமையான சட்ட நடவடிக்கை: தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு: தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு: பொதுமக்கள் அச்சமின்றிப் பயணம் செய்யவும், வாழவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.
சிறுவர்கள் குற்றப் பாதையில் செல்வது ஒரு தனிப்பட்ட பிரச்னை அல்ல, அது சமூகத்தின் பேரழிவு. போதைப்பொருள் கலாச்சாரம் இளைய தலைமுறையைச் சீரழித்து வரும் நிலையில், அரசு வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் தடுக்கத் தவறினால், அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
