Skip to content

சிலிண்டர் தட்டுப்பாடு: “ஸ்டாலின் சார், டெல்லிக்கு போய் கேட்கலாமே?” – திருச்சியில் விஜய் அதிரடி முழக்கம்!

திருச்சி,ஏப்.02; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 2,வியாழன்) திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின், பொதுமக்களிடையே உரையாற்றிய அவர் ஆளும் திமுக அரசு மற்றும் மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சிலிண்டர் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு

தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்துப் பேசிய விஜய், “சிலிண்டர் பிரச்னையால் பல தேநீர்க் கடைகளும், உணவகங்களும் மூடப்பட்டு வருகின்றன; இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே முழு பொறுப்பு; முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்னை என்றால் உடனே டெல்லிக்கு பறந்து சென்று விடுகிறார்; அப்படியிருக்கும்போது, மக்களின் இந்த சிலிண்டர் பிரச்னைக்காக ஏன் டெல்லிக்குச் சென்று அழுத்தம் கொடுக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

வாக்குறுதிகள் என்ன ஆனது?

கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை விஜய் சுட்டிக்காட்டினார்:

ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழி.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.

நீட் தேர்வு ரத்து.

கேஸ் மானியம்.

“இவற்றைச் செய்யாமல், எதையெல்லாம் நிறைவேற்ற முடியாதோ அதையெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை” என்று விஜய் சாடினார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிர்வாகத் தோல்வி

திருச்சியில் உள்ள ஒரு அமைச்சர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் சுமத்தினார். நகராட்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விஜய்யின் உறுதிமொழி: 100% நேர்மையான ஆட்சி

தனது பரப்புரையின் போது விஜய் பேசியதாவது: “நான் வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு உங்களுக்காகவும், உங்கள் மீதுள்ள நன்றிக்கடனுக்காகவும் வந்துள்ளேன்; எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; 100 சதவீதம் நேர்மையான ஆட்சியை நான் தருவேன்; பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு எங்களது அரசு முன்னுரிமை அளிக்கும்” என்றும் விஜய் வாக்குறுதி அளித்தார்.

“திமுகவையும் நம்பாதீர்கள், பாஜகவையும் நம்பாதீர்கள். என்னை 100 சதவீதம் நம்பலாம்” என்று கூறிய விஜய், வரும் ஏப்ரல் 23-ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக, தனது ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் ஒரு பாடலைப் பாடி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *