செங்கல்பட்டு தொகுதி (எண் – 32)
செங்கல்பட்டு தொகுதி கடந்த 1952 தொடங்கி இதுவரை 16 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இத்தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், பாமக இரு முறையும், கிஸான் மஸ்தூர் பிரஜா, காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு வன்னியர், முதலியார், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றனர்.
மீண்டும் களம்காண விரும்பும் வரலட்சுமி மதுசூதனன்
தற்போதைய திமுக எம்எல்ஏவான வரலட்சுமி மதுசூதனன் மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.
அதேவேளை கூடுவாஞ்சேரி நந்திவரம் நகராட்சியின் தலைவர் கார்த்திக்கும் சீட் பெற முயல்கிறார்.
அதிமுகவில், கடந்த முறை போட்டியிட்ட கஜேந்திரன் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். பாமக., தேமுதிக ஆகிய கட்சிகளும் இந்தத் தொகுதியின் மீது கண் வைத்துள்ளன.
கடந்த தேர்தலில், வரலட்சுமி மதுசூதனனுக்கு 1,31,000 வாக்குகள் கிடைத்தன. அதிமுகவின் கஜேந்திரன் 1,04,000 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் சஞ்சீவிநாதன் 27,000 வாக்குகளையும் பெற்றனர்.
திமுகவின் கோட்டை…ஆனால், உள்ளடி அரசியலால் திணறல்.. !
2026 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் பலம், எம்எல்ஏவின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவற்றால் திமுகவுக்குச் சாதகமான சூழல் நிலவுவது போல தென்படுகிறது.
ஆனாலும், திமுகவிற்குள் நிலவும் உள்ளடி அரசியல் வரலட்சுமி மதுசூதனனுக்கு மைனஸ் பாயிண்ட்கள்.
இதுபோதாதென்று புதுவரவான தவெகவும் குடைச்சலைக் கொடுக்கும் எனக் கூறப்படுவதால், வரும் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதி திமுகவுக்கு அக்னிப்பரீட்சையாக இருக்கும் எனத் தெரிகிறது.
