சென்னை,பிப்.06; சென்னையின் முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பாதாள சாக்கடை இறைக்கும் நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
36 மணி நேர சேவை பாதிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) சார்பில் மூலக்கடை சந்திப்பு மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் முக்கிய கழிவுநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) வரும் இன்று (06.02.2026) மதியம் 2 மணி முதல் நாளை மறுதினம் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை சுமார் 36 மணி நேரத்திற்கு கழிவுநீர் இறைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உள்ளது.
பாதிக்கப்படும் முக்கிய மண்டலங்கள்
இந்த பராமரிப்புப் பணிகளால் வட சென்னை மற்றும் மத்திய சென்னையின் மூன்று முக்கிய மண்டலங்களில் கழிவுநீர் வெளியேற்றத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது:
மாதவரம் மண்டலம்: கடப்பா சாலை, மாதனங்குப்பம், ராஜீவ் காந்தி நகர், தாங்கல் கரை, புத்தகரம் மற்றும் பத்மாவதி நகர்.
திரு.வி.க நகர் மண்டலம்: வில்லிவாக்கம் செக்டார்-A மற்றும் வீனஸ் நகர் (ஜானகி நகர்).
அண்ணா நகர் மண்டலம்: வில்லிவாக்கம் லாகூன், வில்லிவாக்கம் பேஸ் 1 & 2, அகஸ்தியர் நகர், வடக்கு ஜெகநாதன் நகர் மற்றும் வில்லிவாக்கம் செக்டார்-B.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை
இந்த 36 மணி நேர இடைவெளியில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு அல்லது பெருக்கெடுத்தல் போன்ற புகார்கள் இருந்தால், பொதுமக்கள் அந்தந்த மண்டல பொறியாளர்களைத் தொடர்பு கொள்ளலாம் என மெட்ரோ வாட்டர் வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்பு எண்கள்:
மாதவரம்: 8144930903
திரு.வி.க நகர்: 8144930906
அண்ணா நகர்: 8144930908
தற்காலிக இடையூறு தவிர்க்க முடியாதது- மெட்ரோ நிர்வாகம்
மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக இந்தத் தற்காலிக இடையூறு அவசியமாகிறது. எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த 36 மணி நேரத்திற்கு கழிவுநீர் வெளியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, ஏதேனும் அவசரத் தேவைக்கு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.