மும்பை,பிப்.08; நடப்புச் சாம்பியனான இந்திய அணி, டி20 உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்திலேயே அமெரிக்க அணியிடம் பெரும் சவாலை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி,7) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒரு கட்டத்தில் மோசமான நிலையில் இருந்த இந்தியாவை கேப்டன் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தால் மீட்டு வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா
டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ரசிகர்கள் சிக்ஸர் மழையை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அமெரிக்க பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே இந்தியாவை திணறடித்தனர். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
பவர்-பிளேயின் கடைசி ஓவரில் ஷேட்லி வான் ஷால்க்விக் (Shadley Van Schalkmyk) மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். இதனால் இந்திய அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
கேப்டனின் போராட்டமும் மீட்சியும்
இஷான் கிஷன், திலக் வர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது தனி ஆளாக கேப்டன் சூர்யகுமார், பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
36 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 21 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 161/9 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
அமெரிக்காவின் பதிலடி மற்றும் இந்திய பந்துவீச்சு
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டனர். எனினும், மிலிந்த் குமார் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி இணை 58 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தினர்.
இறுதியில் அனுபவமிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 132/8 ரன்கள் மட்டுமே எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி உலக சாதனை
இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் எட்டு வெற்றிகளின் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது
உலகக்கோப்பை பயணம்; வெற்றிக்கணக்குடன் தொடங்கிய இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதே வேளையில், கத்துக்குட்டி அணியாகக் கருதப்படும் அமெரிக்கா, உலகின் முன்னணி அணியான இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவின் இந்த “கேப்டன் நாக்” இந்திய ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
