Skip to content

டி20 உலகக்கோப்பை; ஆஸ்திரேலியாவுக்கு ஜிம்பாப்வே ‘ஷாக்’ – 23 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி!

கொழும்பு,பிப்.14; டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை அதிரவைக்கும் ஒரு மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. கொழும்புவில் நேற்று (13.02.2026) நடைபெற்ற குரூப் பி (Group B) ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வேயின் நிதானமான பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்குத் தொடக்க வீரர் பிரையன் பென்னட் (Brian Bennett) தூணாக அமைந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட அவர், 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக மருமானி மற்றும் ரயான் பர்ல் தலா 35 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 25 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் தடுமாற்றமும் முசரபானியின் மேஜிக்கும்

170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முசரபானி (Blessing Muzarabani) தனது அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரைச் சிதைத்தார். ஆஸ்திரேலியா வெறும் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மேக்ஸ்வெல் (31) மற்றும் மேட் ரென்ஷா (65) ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை மீட்கப் போராடினர். இருப்பினும், முசரபானி மற்றும் பிராட் எவன்ஸின் துல்லியமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முசரபானி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூப்பர் 8 சுற்றுக்கு நெருக்கடி

இந்தத் தோல்வியின் மூலம் குரூப் பி புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஜிம்பாப்வே அணி தனது அபார ஆட்டத்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிராவிஸ் ஹெட், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் என்றும், இந்தத் தோல்வி தங்களுக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டார்.

19ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல்

கிரிக்கெட் உலகில் ‘நிச்சயமற்ற தன்மை’ என்பதற்கு இந்த ஆட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே, சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு உலகக் கோப்பையில் அதே சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது டி20 உலகக் கோப்பை தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *