2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஷுப்மன் கில் நீக்கம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்த அறிவிப்பில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதுதான். கடந்த சில தொடர்களாக போதிய ரன்கள் எடுக்கத் தவறியது மற்றும் அணியின் காம்பினேஷன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை டாப் ஆர்டரில் களமிறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
துணை கேப்டனாக அக்சர் படேல் நியமனம்
ஷுப்மன் கில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணியின் புதிய துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சமீபகாலமாக அக்சர் வெளிப்படுத்தி வரும் அபாரமான ஆட்டமே அவருக்கு இந்த உயரிய பொறுப்பை பெற்றுத் தந்துள்ளது.
இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் மீண்டு(ம்) வருகை
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். சமீபத்திய சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு மீண்டும் உலகக் கோப்பை கதவைத் திறந்துவிட்டுள்ளது. அதேபோல், கடந்த தொடர்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ரிங்கு சிங் மீண்டும் பினிஷர் ரோலில் அணியில் இணைந்துள்ளார்.
சஞ்சு சாம்சன் – அபிஷேக் ஜோடி?
முதன்மையானது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அபிஷேக்குடன் தொடக்க வீரராகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திலக் 3ஆவது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் 4ஆவது இடத்திலும் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளனர்.
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் (கேப்டன்), அக்சர் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக், திலக், ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
