சென்னை,பிப்.23; தமிழ்நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் உளவுத்துறையின் செயல்பாடு குறித்து தவெக முக்கிய நிர்வாகி அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார். திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த அதிரடி வேட்டை: உளவுத்துறை தோல்வியா?
திருப்பூர் போன்ற ஒரு பரபரப்பான தொழில் நகரத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அருண்ராஜ் இட்டுள்ள பதிவில், “ஒரு மாநிலத்தின் உளவுத்துறை என்பது அந்த மாநிலத்தின் கண்கள் போன்றது. ஆனால், டெல்லி போலீசார் வந்து திருப்பூரில் அதிரடி வேட்டை நடத்தும் வரை, தமிழ்நாடு காவல்துறைக்கோ அல்லது மாநில உளவுப்பிரிவுக்கோ இது குறித்த எந்தத் தகவலும் தெரியாமல் போனது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
போலி ஆதார் கார்டுகள் மற்றும் ஊடுருவல் அபாயம்
தொழில் நகரமான திருப்பூரில் வெளிநாட்டினர் போலி ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாகத் தங்கியிருந்து, உளவு வேலைகளில் ஈடுபட்டிருப்பது ஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கிற்குச் சான்றாகும் என அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று முழுங்கி என்ன பயன்?
வெளிநாட்டினர் மிக எளிதாகப் போலி ஆவணங்களைப் பெற்று இங்கு குடியேறுவது, அரசு இயந்திரத்தின் மீதான பிடி தளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு ‘அமைதிப் பூங்கா’ என்று மேடைக்கு மேடை முழங்கும் அரசு, இத்தகைய சமூக விரோத சக்திகள் ஊடுருவுவதைத் தடுக்கத் தவறிவிட்டது என்பதே உண்மை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் vs மாநில பாதுகாப்பு
தமிழ்நாடு அரசு தனது உளவுத்துறையை அரசியல் பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, மாநிலத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அந்நிய சக்திகளுக்கு தமிழ்நாட்டு மண் புகலிடமா?
“அந்நியச் சக்திகள் தமிழக மண்ணைப் புகலிடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. டெல்லி போலீசார் தலையிட்டுச் செயல்படும் வரை உள்ளூர் நிர்வாகம் அமைதி காத்தது ஏன் என்ற கேள்விக்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றும் அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
அரசின் உடனடி நடவடிக்கை தேவை
தமிழ்நாட்டின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. தேச விரோத சக்திகள் மாநிலத்திற்குள் ஊடுருவுவது ஒட்டுமொத்த அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, இனிமேலாவது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு, இத்தகைய ஊடுருவல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
