Skip to content

தமிழ்நாடு தேர்தல் களம்; மகளிர் உரிமைத் தொகை மட்டும் வெற்றியைத் தருமா? பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பும் கேள்வி!

சென்னை,பிப்.16; தமிழ்நாடு அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களத்தில் இப்போதே அனல்பறக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் காங்கிரஸ்காரர் பிரவீன் சக்ரவர்த்தியின் சமீபத்திய கருத்து, கூட்டணிக்குள் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: ஒரு ‘மூடநம்பிக்கை’யா?

திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ அக்கட்சியின் மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்துப் பேசியுள்ள பிரவீன் சக்ரவர்த்தி, “மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதைச் செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், இந்த ஒரு திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது வெறும் மூடநம்பிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.

தரவுகளுடன் முன்வைக்கப்படும் விமர்சனம்

தனது கருத்தை வலுப்படுத்த சில முக்கியத் தரவுகளையும் அவர் முன்வைத்துள்ளார்:

கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்பாக நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களை (Direct Cash Transfer) அறிவித்த 9 பெரிய மாநிலங்களில், 4 மாநில அரசுகள் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளன.

மீதமுள்ள 5 மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன.

இந்தத் தரவுகளின் மூலம், மக்கள் வெறும் பணப்பயன்களை மட்டும் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதையும், ஆட்சி அதிகாரம் மற்றும் கூட்டணி பலம் முக்கியம் என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

கூட்டணி ஆட்சிக்கான அழுத்தம்?

ஏற்கனவே தமிழ்நாட்டில் “கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை” என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அது சாத்தியமில்லை என பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது மகளிர் உரிமைத் திட்டத்தை விமர்சிப்பதன் மூலம், திமுகவின் தனிப்பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு, காங்கிரஸுக்கான அதிகாரப் பகிர்வை அவர் வலியுறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விஜய்யை சந்திப்பதற்கு முன் பிரவீன் சக்கரவர்த்தியை யாருக்கு தெரியும்?

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை சந்தித்த பின்னர் வெளிச்சத்திற்கு வந்த பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரசில் யார்? அதற்கு முன்னர் அவரை யாருக்காவது தெரியுமா? இவரது எல்லை மீறிய பதிவுகளை காங்கிரஸ் மேலிடம் கட்டுப்படுத்தாதது ஏன்? என்று திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அகில இந்திய தலைவர்களைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா..?

கூட்டணி, அதிகாரப்பகிர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் வெவ்வேறு கருத்துகளைப் பேசிவருவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூரை கண்டித்துள்ள செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், ராகுல் காந்தியும் அறிவுறுத்தியிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அகில இந்திய தலைவர்களைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா..? என்று செல்வப்பெருந்தகை வினவியுள்ளார். அறைக்குள் பேச வேண்டியதை பொதுவெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *