சென்னை,ஏப்.04; தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை வருகையும் வரவேற்பும்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவிலான சாலை வலம் (Road Show) நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நேற்றிரவு (ஏப்ரல் 3, வெள்ளி) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிர்வாகிகளுடன் மோடி தீவிர ஆலோசனை
விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் கள நிலவரம், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்தது குறித்த விவரங்களும் விவாதிக்கப்பட்டன.
அடுத்தகட்ட தேர்தல் வியூகங்கள்
இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அடுத்தகட்ட பரப்புரையை பொதுக்கூட்டமாக நடத்துவதா அல்லது மக்களுடன் நேரடியாக உரையாடும் சாலை வலம் (Road Show) நிகழ்ச்சியாக நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய பரப்புரைக் கூட்டத்திற்கு திட்டமிடுதல் குறித்தும் அப்போது விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. பரப்புரை வியூகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இதில் பேசப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை முடித்துக் கொண்டு பிரதமர் இன்று (ஏப்ரல் 4, 2026) பிற்பகல் கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்ற இலக்கோடு பாஜக தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், பிரதமரின் இந்த நேரடி ஆலோசனைகள் அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் களத்தில் பிரதமரின் இந்த நகர்வுகள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
