சென்னை, டிச.27; சென்னையில், பணி நிரந்தரம் கோரி போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று (27.12.2025) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தின் பின்னணி என்ன?
சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலம் (மண்டலம் 5 மற்றும் 6) பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், கடந்த 2 மாதங்களாகத் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்துத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசுத் தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்று அறிவித்திருந்த பணியாளர்கள், இன்று (டிச.27) தலைமைச் செயலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனர்.
பாரிமுனையில் குவிக்கப்பட்ட போலீசார்
தூய்மைப் பணியாளர்களின் இந்த முற்றுகைப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று காலை முதலே சென்னை பாரிமுனை மற்றும் ஜார்ஜ் கோட்டை பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக வருவதைத் தடுக்கப் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட பணியாளர்கள்
பாரிமுனை குறளகத்தில் இருந்து கோட்டையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களை, பிராட்வே பேருந்து நிலையம் அருகிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றபோது, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போதிலும், பணியாளர்கள் சாலைகளிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிராட்வே மற்றும் பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?
தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம் நீண்ட நாட்களாகத் தொடர்வது அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது. பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தர பணி போன்ற வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக அவர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம், எதிர்காலத்தில் எந்த மாதிரியான முடிவை எட்டும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
