சென்னை,ஜன.27; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கதவுகளை திறந்து வைத்திருந்தும் யாரும் கூட்டணிக்கு வராததால், தனித்துப் போட்டியிடுவதென தவெக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்ற சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ் தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அணிகள் உருவாகிவிட்டன, ஆனால் ராமதாஸ்…?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி, தவெக தலைமையில் மற்றொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
ஆனால், தேமுதிக, ராமதாஸின் பாமக ஆகியவை இன்னும் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வருகின்றன. இவ்விரு கட்சிகளும் ஆளுங்கட்சியான திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் திருமா, அதிமுக கூட்டணியில் அன்புமணி எதிர்ப்பு!
திமுக கூட்டணியில் ராமதாசை சேர்க்க திருமாவளவன் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. இதேபோன்று அதிமுக கூட்டணியிலும் ராமதாஸின் பாமகவை இணைக்க அன்புமணியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ராமதாஸ் தரப்பிலிருந்து தவெகவிற்கு தூது!
இந்நிலையில், ராமதாஸ் தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ராமதாஸ் தரப்பிலிருந்து தவெக முகாமிற்கு ரகசியத் தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாமக நிர்வாகிகள் ஒரு சிலர் கூடிய விரைவில், செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
