சென்னை,பிப்.20; திமுக அரசை, வரவிருக்கும் தேர்தலில் தூக்கியறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் தயாராக இருப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமி்ழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான சொற்போர் நடந்து வருகிறது. அந்த வகையில், தவெக தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை ஊழல் விவகாரத்தில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1020 கோடி நகராட்சித் துறை ஊழல்: விஜய்யின் குற்றச்சாட்டு
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை சுமத்தியுள்ள ரூ.1020 கோடி ஊழல் புகாரை சுட்டிக்காட்டி விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக் கொண்டே செல்வதில் இந்த ‘வெற்று விளம்பர மாடல்’ திமுக அரசு கைதேர்ந்தது” என அவர் விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தின் தலையீடும் அமைச்சரின் பதவியும்
இந்த ஊழல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதை விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். “திமுக அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்க முடியாத அவமானங்களில் இதுவும் ஒன்று” என்று கூறிய அவர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவர் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரம் கோடிகளில் ஊழல்: மக்களின் காத்திருப்பு
டாஸ்மாக் ஊழலில் தொடங்கி தற்போது நகராட்சித் துறை வரை அனைத்தும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் மலிந்துள்ளதாக விஜய் சாடியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும், திமுக அரசு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதாகவும், ஆனால் மக்கள் இந்த ‘மன்னிக்க முடியாத ஊழல் அரசை’ தூக்கி எறிய விசிலடித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கெதிரான விமர்சனங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தமிழ்நாடு அரசியலில் ஊழல் புகார்கள் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது விஜய் முன்வைத்துள்ள இந்த நேரடித் தாக்குதல், வரும் 2026 தேர்தலுக்கான அவரது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு எதிரான இந்த விமர்சனங்கள் மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
