ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், கடந்த 27ஆம் தேதி சென்னையில் இருந்து ரயிலில் திருப்பதி சென்றபோது, திருவாலங்காடு ரயில் நிலையத்தில், நான்கு சிறுவர்கள் பட்டாக் கத்திகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் ரயிலில் ஏறியுள்ளனர்.
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்
அப்போது அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. அங்கு ரயிலில் கதவின் அருகில் அமர்ந்திருந்த சுராஜை வம்பிழுத்து, பட்டாக்கத்தியை கொண்டு குத்துவது, வெட்டுவது போல் செய்து, செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கொண்டே இருந்தனர்.
ஒருகட்டத்தில் சிறுவர்கள், பட்டாக்கத்திகளால் சுராஜை தாக்கத் தொடங்கினர். சிறுவர்களின் கைகளில் பட்டாக்கத்திகள் இருந்ததால் யாரும் சுராஜை காப்பாற்ற முன்வரவில்லை.
வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய சிறுவர்கள்
திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும், சுராஜை அடித்து உதைத்து ரயிலில் இருந்து கீழே இறக்கிய சிறுவர்கள், ரயில் நிலைய சுவர் வெளிப்புற பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து சுராஜை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். கஞ்சா போதை தலைக்கு ஏறியதை தொடர்ந்து சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்திகளால் சுராஜின் கை, கால், தலை, முகம் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். ரத்த வெள்ளத்தில் சுராஜ் கதறினார். ஒருகட்டத்தில் சுராஜ் மயக்கமடைந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
திருத்தணி சம்பவம்; திருமாவளவனின் கடும் கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், வன்முறையைக் கையில் எடுக்கும் இளைஞர்களின் மனநிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
சமூக அவலம்: “உழைக்க வந்த ஒரு இளைஞரை இப்படி மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது நாகரிக சமூகத்திற்கு அழகல்ல.”
தலைகுனிவு: “வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற பெயருக்கு இதுபோன்ற சம்பவங்கள் பெரும் களங்கத்தை விளைவிக்கின்றன. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவாகும்.”
போதைப்பொருள் தாக்கம்: வன்முறை மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்களைச் சீரழிப்பதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு இதனை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
