திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபப்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராதாகிருஷ்ணன் அமர்வு முன் இன்று (04.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை – நாங்கள் மேல் முறையீடு செய்ய தயாராகி வந்தோம் -ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கியது சட்டவிரோதமானது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்திதான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இன்று (04.12.2025) மாலை தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம்; அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
