திருவனந்தபுரம், டிச.26; கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக முதன்முறையாக கைப்பற்றியது. 45 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பாஜக திருவனந்தபுரம் மாநகரட்சியை கைப்பற்றியது தேசிய அளவில் கவனம் பெற்றது.
மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை பாஜகவும் 29 வார்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், 19 வார்டுகளை காங்கிரசும், 2 வார்டுகளை சுயேச்சைகளும் வென்றன. ஒரு வார்டில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தலைமையின் முடிவு மற்றும் முக்கிய அறிவிப்புகள்
இதனைத் தொடர்ந்து, மேயர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்டத் தலைமைக்கு இடையே தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன.
பின்னர் பா.ஜ.க கவுன்சிலர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் வி.வி. ராஜேஷ் மேயர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயர் வேட்பாளர் ஆஷா நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய அறிவிப்பை மாநில பொதுச் செயலாளர் எஸ். சுரேஷ் வெளியிட்டார்.
மேயர் வேட்பாளர்; முன்னாள் டி.ஜி.பி ஆர். ஸ்ரீலேகா ஏமாற்றம்
முன்னதாக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஆர். ஸ்ரீலேகாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், மாநகராட்சியில் அரசியல் அனுபவம் வாய்ந்த ஒருவரே மேயராக இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியதால், வி.வி. ராஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ஏற்கனவே திருவனந்தபுரம் மாவட்டத் தலைவராகவும், யுவமோர்ச்சாவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மீதான ஊழல் புகார்களை முன்னெடுத்து பல போராட்டங்களை நடத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
