சென்னை,ஜன.23; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறத. ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், திடீரென ஆளுங்கட்சியில் ஐக்கியமானது ஏன்? அவர் முன்வைத்த நிபந்தனை என்ன?
அ.தி.மு.க-வில் முக்கிய இடத்திலிருந்து தி.மு.க வரை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் வைத்திலிங்கம். டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் முகமாகத் திகழ்ந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் ஓ.பி.எஸ் பக்கம் நின்றார்.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட அவர், ஓ.பி.எஸ் அணியின் தூணாகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓ.பி.எஸ் அணியின் மந்தமான செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த வைத்திலிங்கம், தற்போது தி.மு.க-வில் இணைய முடிவு செய்தார்.
செந்தில் பாலாஜி நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தை
தி.மு.க-வில் இணைவதற்கு முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்திலிங்கத்தைச் சந்தித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, தான் தி.மு.க-வில் இணைந்தால் கட்சிக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்தும், அதற்குப் பதிலாகத் தனக்குத் தேவையான முக்கியத்துவம் குறித்தும் அவர் விவாதித்துள்ளார்.
வைத்திலிங்கம் வைத்த அந்த “ஒரே” கோரிக்கை
பொதுவாகப் பெரிய தலைவர்கள் கட்சி மாறும்போது பெரிய பதவிகளை எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், வைத்திலிங்கம் தி.மு.க தலைமையிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை மட்டும் முன்வைத்ததாகத் தெரிகிறது.
மகன் பிரபுவுக்கு வாய்ப்பு: வரும் சட்டமன்றத் தேர்தலில், தனது மகன் பிரபு-வுக்கு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.
தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது செல்வாக்கை தி.மு.க-வுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும், அதற்குப் பிரதிபலனாக மகனின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பச்சைக்கொடி காட்டிய பிறகே, வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி தி.மு.க-வில் இணைந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்படப்போகும் மாற்றம்
வைத்திலிங்கத்தின் வருகை தஞ்சாவூர் மற்றும் டெல்டா மண்டலங்களில் தி.மு.க-வை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை “இரட்டை இலை” சின்னத்திற்காக வாக்கு சேகரித்த வைத்திலிங்கம், இனி “உதயசூரியன்” சின்னத்திற்காகத் தனது மகனுக்காகக் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு வைத்திலிங்கத்தின் இந்த மாற்றம் ஒரு சிறந்த உதாரணம். 2026 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் இந்த “தந்தை-மகன்” கூட்டணி எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
