டெல்லி, டிச.26; காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், முதலமமைச்சர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே இந்தப் பிரச்னை இருந்து வருவதாக மாநில அரசியலில் பேசப்படுகிறது.
2½ ஆண்டுகள் முடிந்த பிறகும் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். இதனால் சிவக்குமார் ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவுடன் சிவகுமார் சந்திப்பு
இதுபோன்ற சூழலில் டெல்லி சென்ற டி.கே. சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் நேற்று (26.12.2025) சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகுமாரிடம், முதலமைச்சர் பதவி விவகாரம் குறித்து கார்கேவுடன் பேசினீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டது குறித்து மட்டுமே அவருடன் பேசியதாகத் தெரிவித்தார
கார்கேவுடன் கர்நாடக அரசியல் பற்றி பேசவில்லையா?
கார்கேவுடன் வேறு எந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்கவில்லை என்று குறிப்பிட்ட சிவகுமார். “அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, நான் அதைச் செய்ய மாட்டேன், இப்போதைக்கு அப்படி எதுவும் இல்லை. மேலிட கட்டளையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவோம் என்று நானும் சித்தராமையாவும் கூறியுள்ளோம், மேலும் அதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
வெற்றியை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் காங்கிரஸ் மேலிடம்
கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கவும் மேலிடம் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இரு தலைவர்களையும் திருப்திப்படுத்தும் வகையிலும் ஒரு சுமூகமான முடிவு விரைவில் எட்டப்படும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
