டெல்லி,மார்ச்.15; மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் என எதுவாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் எப்போது அமலுக்கு வந்தன?
சட்டப்பேரவைத் தேர்தல்: முதன்முதலாக 1960ஆம் ஆண்டு கேரளம் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தல்: 1967ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது முதல்முறையாக இந்த விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிகள் எந்தவொரு சட்டத்தின் கீழும் அமலாகவில்லை. எனினும், இதன் சில விதிகள் ஐ பி சி -ன் கீழ் அமலாகின்றன.
தேர்தல் விதிகளை கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்றுவது அவசியம்
அதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியமாகும். இந்த விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சிறை தண்டனை கூட வழங்க முடியும். முடிந்தால் நடைபெற வேண்டிய குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படவும் முடியும். இந்த விதிகள் அமலில் இருக்கும் போது அரசு எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அனுமதி பெறாமல் கட்சி கொடிகள், பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்கக் கூடாது.
அரசு அறிவிப்புகள், அடிக்கல் நாட்டுதல், பூமி பூஜை கூடாது
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாது என விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் இந்த அலுவலகங்கள் திறக்கப்படும்.
அரசு வாகனங்கள் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்
அரசு வாகனங்கள், இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். தேர்தல் முடிந்த பின்னரே திறக்கப்படும். இதேபோல ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சி தலைவரின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தலைவர்களின் படங்களுடன் கூடிய நாள்காட்டிகள் அகற்றப்படும்
அரசியல் கட்சியினர் விளம்பர படுத்தும் வகையில் இருக்கும் முதலமைச்சர், பிரதமர், அரசியல் கட்சியினரின் முக்கிய தலைவர்கள் உள்பட தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது காலெண்டர்கள் அரசு அலுவலங்களில் உடனடியாக அகற்றப்படும்.
தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரிபார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
சாதி, மத அடிப்படையில் வாக்கு சேரிக்கக் கூடாது
சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
வேட்பாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என யாராக இருந்தாலும் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வெளியில் எடுத்துச் சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம் அல்லது பரிசு பொருட்கள் விநியோகிக்க கூடாது. இதை தடுக்கவே தேர்தல் ஆணையம் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.
நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தேர்தல் வரை நிறுத்தப்படும்
நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் அனைத்து நலத்திட்ட உதவிகள் தேர்தல் முடிந்து புதிய அரசு வரும் வரை நிறுத்தப்படும். குடும்ப அட்டை விண்ணப்பம், முதியோர் உதவி தொகை விண்ணப்பம், விதவையர் விண்ணப்பம், சமுக நலத்திட்ட உதவிகள் கோருவது உள்பட அனைத்து பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு அமைந்த பின்னரே செயல்பாட்டிற்கு வரும்.
தேர்தல் அறிவித்தவுடன் அரசு ‘காபந்து’ அரசாகிவிடும்
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தற்போது உள்ள அரசு காபந்து (Caretaker Government) அரசாக மாறிவிடும். வழக்கமான நிர்வாகம் முடங்காமல் இருக்க தற்காலிகமாகப் பொறுப்பு வகிக்கும் வெளியேறும் அரசாகும். அரசால் எந்த அறிவிப்பும் புதிதாக வெளியிட முடியாது. ஏற்கனவே நிதி ஒதுக்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை.
தேர்தல் ஆணைய இணையத்தில் விரிவான தகவல்கள்
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்குச் சாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் என அனைத்து தகவல்களும் தேர்தல் ஆணைய இணையத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
