Skip to content

பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை: மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் – சூடிபிடிக்கிறது அரசியல் களம்!

சென்னை,பிப்.05 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி மதுரையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரையை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், தமிழ்நாட்டிற்கு “இரட்டை என்ஜின் ஆட்சி” தேவை என்று வலியுறுத்தினார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

‘என்ஜின்’ அரசியலும் அனல் பறக்கும் விவாதங்களும்”

மதுராந்தக கூட்டத்தில் மோடி பேசிய “இரட்டை என்ஜின்” கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பதிலடி கொடுத்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின்: “டப்பா என்ஜின் ஆட்சி தமிழகத்தில் எடுபடாது” என விமர்சித்தார்.

விஜய்: “டாப் என்ஜின் நாம் தான்” என கட்சியின் 3-வது ஆண்டு விழாவில் பேசினார்.

இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி எத்தகைய கருத்துகளை முன்வைப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மெகா பொதுக்கூட்டம் – பிப்ரவரி 28

பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, இம்மாதம் 28-ம் தேதி (சனிக்கிழமை) மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தென் தமிழ்நாட்டின் மையப்புள்ளியான மதுரையில் இந்த கூட்டம் நடப்பது, அப்பகுதியில் உள்ள தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிக் களம்

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. தென் மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மதுரை பொதுக்கூட்டம் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் மோடியின் தொடர் தமிழ்நாடு வருகை, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *