Skip to content

பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம்; போதிய வழிகாட்டுதல் இன்றி பயணிகள் அவதி


சென்னை,ஜன.25; சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்காலிகமாக தீவுத்திடல் மற்றும் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. செயல்பாட்டின் முதல் நாளான சனிக்கிழமை அன்று (24.01.2026), போதிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குழப்பத்தில் பயணிகள் மற்றும் முதியவர்கள்

பிராட்வேயில் இருந்து சுமார் 841 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவை தீவுத்திடல் (526 பேருந்துகள்) மற்றும் ராயபுரம் (355 பேருந்துகள்) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், பேருந்து நிலைய முகப்பில் சரியான அறிவிப்புப் பலகைகளோ அல்லது பயணிகளுக்கு உதவ அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வழிகாட்ட ஆள் இல்லாததால் பெண்கள், முதியவர்கள் அலைக்கழிப்பு

குறிப்பாக, சோழிங்கநல்லூரில் பணிபுரியும் பவித்ரா என்பவர் கூறுகையில், “எனக்கு பிராட்வே பேருந்து நிலையம் மட்டுமே தெரியும். தீவுத்திடலில் தற்காலிக நிலையம் இருப்பது எனக்குத் தெரியாது, அங்கிருந்தவர்கள் சொன்ன பின்னரே அங்கு சென்றேன்,” என்று கூறினார். இதேபோல் ராயபுரம் சென்ற முதியவர்கள், பேருந்து எண்கள் மற்றும் நேரங்கள் குறித்த விவரங்கள் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டனர்.

வசதிகள் இல்லாத தற்காலிக நிலையங்கள்

ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆவின் உணவகம் மட்டுமே உள்ளது. பேருந்து வருகை மற்றும் புறப்பாடு குறித்த ஒலிபெருக்கி அறிவிப்புகள் இல்லாதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 102K பேருந்தில் பயணிக்க வந்த முதியவர் ஒருவரை, ராயபுரத்திலிருந்து மீண்டும் தீவுத்திடலுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியது போன்ற சம்பவங்கள் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுகின்றன.

மேலும், பேருந்துகளில் உள்ள பெயர் பலகைகள் இன்னும் ‘பிராட்வே’ என்றே காட்டப்படுவதால் பயணிகள் எந்த பேருந்தில் ஏறுவது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

புதிய மல்டி-மாடல் போக்குவரத்து மையம்

பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுமார் 26,240 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன மல்டி-மாடல் வசதி வளாகம் (MMFC) கட்டப்பட உள்ளது. இதில் சுரங்கப்பாதை இணைப்புகள் மற்றும் பசுமை கட்டடக் கலை அம்சங்கள் இடம் பெறும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *