பூம்புகார் தொகுதி (எண் – 162 )
காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பெருமை கொண்ட பகுதியாக விளங்குவது காவேரிப்பூம்பட்டினம். இது காலப்போக்கில் மருவி பூம்புகார் என அழைக்கப்படுகிறத.
இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ள பூம்புகார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
அதிமுக அதிக முறை வென்றுள்ள தொகுதி
இத்தொகுதி கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 11 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில், அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாமக ஒரு முறையும் வென்றுள்ளன.
இங்கு ஆதி திராவிடர்கள் 40 விழுக்காடும், 38 விழுக்காடு வன்னியர் சமூகத்தினரும் வசிக்கின்றனர். பூம்புகார் தொகுதியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இவ்விரு சமூகத்தினர்தான்.
இவர்கள் தவிர, கிறிஸ்தவர்கள், மீனவர்கள், வெள்ளாளர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் பரவலாக வாழ்கின்றார்கள்.
திமுகவில் தற்போதைய எம்எல்ஏ மீண்டும் போட்டியிட வாய்ப்பு
திமுகவைப் பொறுத்தவரையில், தற்போதைய எம்எல்ஏவான நிவேதா முருகனுக்கு தான் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் எனப் பேசுகின்றனர்.
அதேவேளையில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஆகியோரும் சீட் பெற முயல்கின்றனர்.
அதிமுகவில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ், செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் நடராஜன் ஆகியோர் சீட்டுக்கு முட்டி மோதுகின்றனர்.
முந்தைய தேர்தலில் திமுகவின் நிவேதா முருகன் 96,000 வாக்குகளைப் பெற்று வென்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் பவுன்ராஜ்-க்கு 93,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளுக்கு 15,000 வாக்குகளும் கிடைத்தன.
தேர்தலில் வெயிட் நபருக்கே சீட் கிடைக்கும் எனப் பேச்சு!
2026 தேர்தலில், முதன்முறையாக களமிறங்கும் தவெக, பிரதான கட்சிகள், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் என்பது கணிப்பு.
இருப்பினும், நிவேதா முருகன் ‘வெயிட்’ ஆன நபராக இருப்பதால், உதயசூரியன் சற்றே பளிச்சென தெரிகிறது.
