தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRP) மூலம் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி முன்னெடுத்துள்ள போராட்டம் தற்போது மாநில அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
போராட்டத்தின் தொடக்கம் மற்றும் கைது நடவடிக்கை
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், நீண்ட கால கோரிக்கையான ‘பணி நிரந்தரம்’ என்பதை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
கிளாம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் வரை: விடாத உறுதி
கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்பட்ட பின்னரும் செவிலியர்கள் சளைக்காமல் அங்கேயே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.
நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டம் நடத்தினர்
அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, திருமண மண்டபத்திலிருந்து வெளியேறிய செவிலியர்கள், நந்திவரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து தர்ணா வில் ஈடுபட்டனர். போராட்டம் இன்று (22.12.2025) 5ஆவது நாளை எட்டிய நிலையில், அவர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி
அப்போது ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும். தற்போது 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
