மடத்துக்குளம் தொகுதி (எண் – 126)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் உருவாக்கப்பட்டது.
இதுவரை மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக இரண்டு முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கொங்கு வேளாள கவுண்டர்
இங்கு கொங்கு வேளாள கவுண்டர்களும், அவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் தவிர, கம்மவார் நாயுடு உள்ளிட்ட சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.
திமுகவில், முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அனிதா, பொதுக்குழு உறுப்பினர் பாபுவின் மனைவி மலர்விழி, ஒன்றியச் செயலாளர் செந்தில் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர்.
அதிமுகவைப் பொறுத்தவரையில், தற்போதைய எம்எல்ஏ மகேந்திரனும், இளைஞர் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் காரத்தொழுவு சுரேஷூம் சீட்டுக்காக வரிந்து கட்டுகின்றனர்.
முந்தைய தேர்தலில் அதிமுகவின் மகேந்திரனுக்கு 84,000 வாக்குகள் கிடைத்தன. திமுகவின் ஜெயராமகிருஷ்ணன் 78,000 வாக்குகளையும், அமமுகவின் சண்முகவேலு சுமார் 6,500 வாக்குகளையும் பெற்றார்கள்.
பிற தொகுதிகளைப் போன்றே தவெக அச்சுறுத்தல் தான்!
வரும் தேர்தலில், பிற தொகுதிகளைப் போலவே மடத்துக்குளத்திலும் தவெக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
ஆனாலும், திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொருளாதாரப் பின்னணி கொண்ட வலுவான வேட்பாளர்களை களமிறக்க வாய்ப்பிருப்பதால், போட்டி கடுமையாகவே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
தொகுதியை எப்படியாவது அதிமுகவிடமிருந்து தட்டிப்பறிக்க வேண்டும் என வியூகம் வகுத்து திமுக செயல்பட்டு வருவதாக பேசிக் கொள்கின்றனர்.
