சென்னை,பிப்.25; மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டாம், அதற்கு மாறாக சட்டப்பேரவை தேர்தலில் 8 எம்எல்ஏ சீட் வேண்டும் என்று அதிமுகவிடம் தமாகா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மாநிலங்களவை எம்பிக்களான கனிமொழி என்விஎன் சோமு (திமுக), திருச்சி சிவா (திமுக), என்ஆர் இளங்கோ (திமுக), அந்தியூர் செல்வராஜ் (திமுக), தம்பிதுரை (அதிமுக), ஜிகே வாசன் (தமாகா) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது.
6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வுசெய்ய மார்ச் மாதம் தேர்தல்
இதனையடுத்து புதிதாக 6 எம்பி-க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், 6 மாநிலங்களவை எம்பி-க்களுக்கான தேர்தல் முன்னதாகவே நடைபெறவுள்ளது. இந்த 6 எம்பி-க்களில் 4 பேரை திமுகவும், 2 பேரை அதிமுகவும் தேர்தெடுக்கவுள்ளது.
மாநிலங்களவை எம்பி சீட் வேண்டாம்; 8 எம்எல்ஏ சீட் வேண்டும்
அதிமுக சார்பில் கடந்த முறை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறையும் அதிமுக கூட்டணியில் உள்ள ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுள்ளார்.
8 இடங்கள் கட்டாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளோம்: தமாகா
இதுதொடர்பாக தமாகா மூத்த தலைவர்களிடம் கேட்ட போது, “தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமாகா சந்தித்தது; அந்த தேர்தலில் தமாகா 6 இடங்களில் போட்டியிட்டது; அடுத்து 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3 இடங்களில் தமாகா நின்றது; தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டு, 15 தொகுதிகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் குறைந்தது 8 இடங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதனால் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துவிட்டோம்” என்று கூறினர்.
