Skip to content

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் சர்ச்சை; “அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார்” – முன்னாள் வங்கதேச கேப்டனின் அதிரடி தகவல்!


டாக்கா,ஜன.07; ஐபிஎல் (IPL 2026) தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட விவகாரம் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், முஸ்தா-பிசுர் ரஹ்மானின் மனநிலை குறித்து முன்னாள் வங்கதேச கேப்டன் முகமது அஷ்ரஃபுல் முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் சர்ச்சையின் பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாஃபிசுர் ரஹ்மானை தனது அணியிலிருந்து விடுவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது அணி டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்றும், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

“அவர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை” – அஷ்ரஃபுல்

தற்போது வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் வங்கதேச முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரஃபுல், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் குறித்து கூறியதாவது:

“முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இப்போது முற்றிலும் நிதானமாக (Chill) இருக்கிறார்; களத்திற்கு வெளியே நடக்கும் பேச்சுகள் – அது இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகட்டும், ஐசிசி அல்லது இந்தியா தொடர்பான விவகாரங்கள் ஆகட்டும் – எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை. அவர் ஒரு தனித்துவமான மனநிலை கொண்ட வீரர்” என்று முகமது அஷ்ரஃபுல் தெரிவித்துள்ளார்.

ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடுவதிலேயே கவனம்

மேலும், ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடுவதிலேயே முஸ்தாஃபிசுர் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், அடுத்ததாக வரும் சவால்களை அவர் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார் என்றும் அஷ்ரஃபுல் கூறியுள்ளார்.

முஸ்தாஃபிசுரின் ஆட்டம் எப்படி உள்ளது?

பிபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் முஸ்தாஃபிசுர் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை என்றாலும், சமீபத்திய போட்டிகளில் தனது பழைய வேகத்திற்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக டாக்கா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் அவர் வீசிய விதம், அவர் ஏன் இந்த டி20 வடிவத்தில் ஒரு ‘வேர்ல்ட் சாம்பியன்’ என்பதை நிரூபித்துள்ளதாக அஷ்ரஃபுல் பாராட்டியுள்ளார்.

ரஹ்மான் விவகாரத்தால் இருநாடுகள் இடையே கசப்பான சூழல்

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விவகாரம் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஒரு கசப்பான சூழலை உருவாக்கியுள்ளது. எனினும், ஒரு தொழில்முறை வீரராக முஸ்தாஃபிசுர் இந்த அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நாட்களில் ஐசிசி (ICC) இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *