பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஒரு அரசு விழாவில் முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாபை (தலை முக்காடு) அகற்றி அவரது முகத்தை பார்த்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளன.
ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா ஒன்றில் நிதிஷ் குமார் கலந்து கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்தது. மேடையில் இருந்த ஒரு முஸ்லிம் பெண்மணி ஹிஜாப் அணிந்திருந்ததைக் கண்ட முதல்வர், திடீரென அதை நோக்கி சுட்டிக்காட்டி, பின்னர் எதிர்பாராதவிதமாக அந்தத் ஹிஜாபை பிடித்து இழுத்து அகற்றினார். இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிதிஷ் “சங்கியாக மாறிவிட்டாரா?”-ஆர்ஜேடி கடும் கண்டனம்
இந்த வீடியோ காட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. “நிதீஷ் ஜி-க்கு என்ன ஆயிற்று? அவரது மனநிலை முற்றிலும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டதா, அல்லது அவர் இப்போது 100% சங்கியாக மாறிவிட்டாரா?” என்று ஆர்ஜேடி கேள்வி எழுப்பியது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ திருப்திப்படுத்தும் அரசியல்
இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் எஜாஸ் அஹமது, “ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்திலிருந்து ஹிஜாபை நீக்கியது, முஸ்லிம் சமூகத்தின் மீதான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அணுகுமுறையை தெளிவாக வெளிப்படுத்துகிறது என விமர்சித்துள்ளார். நிதிஷ் குமார் இப்போது பாஜக மற்றும் RSS-ஐ திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளார் எனவும் அகமது சாடியுள்ளார். இந்தய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் தங்கள் மத மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது என்றும் எஜாஸ் அகமது கடுமையாக விமர்சித்துள்ளார்.
உடன் இருந்தவர்களின் எதிர்வினையும், விசித்திர நடவடிக்கைகளும்..!
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, நிதிஷ் குமாருக்குப் பின்னால் நின்றிருந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, முதல்வரைத் தடுக்க முயன்றது வீடியோவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் ஆகியோர் சிரிப்பதைப் பார்க்க முடிந்தது.
பொதுவெளியில் நிதீஷ் குமார் விசித்திரமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல என்று இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன், அவர் ஒரு மதரஸா நிகழ்வில் குல்லா அணிய மறுத்தது, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலையில் பூந்தொட்டியை வைத்தது, மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்தியபோது திடீரெனக் கைதட்டியது, மற்றும் தேசிய கீதம் ஒலிக்கும்போது சிரித்துப் பேசியது போன்ற சம்பவங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன
