திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு ரூ.1,020 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
அமலாக்கத்துறையின் கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்ககள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், ஒப்பந்தப் புள்ளிகள் கோயிலின் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. கையூட்டு பெற்றுக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும், இந்த ஊழலுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கே.என்.நேரு மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் சாதனங்களில் கிடைத்த வாட்ஸாப் மேசேஜ்கள், 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை சோதனையின்போது ஆதாரமாக திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சமாகப் பெறப்பட்ட பணப்பரிமாற்றம் வெளிநாடுகளிலும், ஹவாலா மூலமும் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை கூறுகிறது. இதுதொடர்பாக PMLA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை எந்த நேரமும் விசாரணையைத் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
