டாக்கா,பிப்.14; வங்கதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் மாற்றங்களுக்கான தாகம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எட்டியுள்ளது. வங்கதேசத்தில் நேற்று முன்தினம் (12.02.2026) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்த பொது வாக்கெடுப்பும் நடந்தது.
இதில், அந்நாட்டு வாக்காளர்கள் இடைக்கால அரசின் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர்.
60% வாக்காளர்கள் ‘ஆம்’ என ஆதரவு
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு முன்மொழிந்த “ஜூலை சாசனம்” (July Charter) எனப்படும் சீர்திருத்தப் பொதிக்கு மக்கள் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, சுமார் 60.26% வாக்காளர்கள் இந்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக ‘ஆம்’ என்று வாக்களித்துள்ளனர்.
ஜூலை சாசனம்: முக்கிய மாற்றங்கள் என்ன?
ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, வங்கதேச அரசியலில் சர்வாதிகாரப் போக்கு மீண்டும் வராமல் தடுக்க இந்த சீர்திருத்தங்கள் அவசியமாகக் கருதப்படுகின்றன. இந்த சாசனத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பிரதமர் பதவிக்கு கால வரம்பு: ஒருவர் தொடர்ந்து எத்தனை முறை பிரதமராக இருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு.
இரு அவை நாடாளுமன்றம்: நாடாளுமன்றத்தில் மேல்சபை (Upper House) உருவாக்கம்.
அதிகாரப் பகிர்வு: அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையில் அதிக சுதந்திரம்.
பெண்களுக்கு முன்னுரிமை: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியப் பொறுப்புகள்.
தேர்தல் முடிவுகள் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி
இந்த பொதுவாக்கெடுப்புடன் இணைந்தே நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பிஎன்பி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
அதே சமயம், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்தின் கடமை
வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் கூறுகையில், “ஜூலை சாசனத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். மக்களின் இந்தத் தீர்ப்பு, வங்கதேசத்தை ஒரு நிலையான ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச வரலாற்றில் பொது வாக்கெடுப்பு ஒரு மைல்கல்!
சர்வாதிகார பிடியிலிருந்து விடுபட்டு, மக்கள் விரும்பும் ஜனநாயகம் மற்றும் நீதியை நிலைநாட்ட ‘ஜூலை சாசனம்’ ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை. புதிய அரசிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
