டெல்லி,பிப்.04; மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த’ (SIR) நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜராகி வாதிடத் தீர்மானித்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்திலும் எதிரொலித்தது S.I.R சர்ச்சை?
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த’ (SIR) நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் சுமார் 56 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை முறையற்றது என்றும், அப்பாவி வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கச் சதி நடப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.
S.I.R விவகாரம் -மம்தா பானர்ஜியின் நிலைப்பாடு
இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கையால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் இந்த நடைமுறையினால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரிழந்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
“மக்களுக்காக நான் ஒரு சாதாரண குடிமகளாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்களின் குரலை ஓங்கி ஒலிப்பேன்,” என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கென உச்ச நீதிமன்றத்தில் வாதிட அனுமதி கோரவிருப்பதாகவும் மம்தா கூறியுள்ளார்.
சட்டப் போராட்டமும் குற்றச்சாட்டுகளும்
இந்த SIR நடைமுறை ‘மனிதாபிமானமற்றது’ மற்றும் ‘திட்டமிடப்படாதது’ என்று மம்தா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் காப்பாற்றவே முதலமைச்சர் இத்தகைய நாடகத்தை நடத்துகிறார் என்று மேற்குவங்க எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் சரிபார்ப்புப் பணி வெளிப்படையாகவும், எவ்வித தன்னிச்சையான முடிவுகளும் இன்றி நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளிப்படையாகப் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஒட்டிவைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஒரு முதலமைச்சரே நேரில் ஆஜராகி வாதிட இருப்பது முதல்முறையா?
ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் உரிமையைப் பாதுகாப்பதே தனது நோக்கம் என்று மம்தா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் ஒரு மாநில முதல்வர், சாதாரண குடிமகளாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு பொதுப் பிரச்னைக்காக வாதாடவிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.
இந்த வழக்கின் தீர்ப்பு மேற்கு வங்கத் தேர்தலிலும், நாட்டின் தேர்தல் நடைமுறைகளிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.