சென்னை,ஜன.10; வருமானத்தை தாக்கல் செய்யாத விவகாரத்தில், நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது சரியே என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
வருமானத்தை காட்டாமல் மறைத்தது கண்டுபிடிப்பு
நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 43 லட்சம் ரூபாய் என்று கூறியிருந்தார். ஆனால், புலி படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவு
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று (09.01.2026)
விசாரணைக்கு வந்தது.
விஜய்க்கு அபராதம் விதித்ததில் தவறில்லை என வாதம்
அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சீனிவாஸ், இந்த அபராத தொகையை காலதாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியல்லை. அவர்கள் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகினார்களா. தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர், இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
