மும்பை, ஜன.24! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசை அமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரது திருமணம் திடீரென நின்றதன் பின்னணியில் இருந்த ரகசியங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. ஸ்மிருதியின் பால்ய கால நண்பர் கூறியுள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
திருமணக் கொண்டாட்டத்தில் நடந்த ‘பயங்கர சீன்’
ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் ஆகியோரது திருமணம் கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அந்த திருமணமே ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, ஸ்மிருதி மந்தனாவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான வித்யன் மானே (Vidnyan Mane) இது குறித்து ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார். திருமணக் கொண்டாட்டங்களின் போது பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். “அங்கு ஒரு பயங்கரமான காட்சி அரங்கேறியது; ஆத்திரமடைந்த கிரிக்கெட் வீராங்கனைகள் பலாஷை பிடித்து அடித்தார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 லட்சம் ரூபாய் மோசடி புகார்
வெறும் தனிப்பட்ட விவகாரம் மட்டுமல்லாது, பலாஷ் முச்சல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நிதி மோசடி புகாரையும் வித்யன் மானே சுமத்தியுள்ளார். ஒரு திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக பலாஷிடம் தான் 40 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், தற்போது அந்த பணத்தைத் திருப்பித் தராமல் பலாஷ் குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பலாஷின் தாய் அமிதா முச்சல் தன்னிடம் கூடுதல் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பலாஷ் முச்சலின் பதில் என்ன?
இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளை பலாஷ் முச்சல் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வித்யன் மானே கூறும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இவை பரப்பப்படுகின்றன. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். பலாஷின் வழக்கறிஞரும் வித்யன் மானேவிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டுள்ளார்.
மௌனம் காக்கும் ஸ்மிருதி மந்தனா
திருமணம் ரத்தான பிறகு ஸ்மிருதி மந்தனா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். “எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை, எங்கள் குடும்பத்தின் தனி உரிமையை மதிக்க வேண்டுகிறேன்” என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இந்த புதிய புகார்கள் குறித்து ஸ்மிருதி தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
பலாஷ் முச்சல் மீது அடுக்கடுக்கான புகார்கள்; உண்மையா?
இந்திய கிரிக்கெட்டின் ‘நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனாவின் திருமண விவகாரம் தற்போது போலீஸ் புகார், மோசடி மற்றும் துரோகம் எனப் பல்வேறு மர்மங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாஷ் முச்சல் மீதான இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது திட்டமிட்டு பரப்பப்படுபவையா என்பதை போலீஸ் விசாரணை தான் உறுதி செய்ய வேண்டும்.
