சென்னை,மே.10; தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய சகாப்தம் இன்று (மே 10, 2026) தொடங்குகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டின் 18ஆவது முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாததால் கடந்த ஐந்து நாட்களாகப் பெரும் அரசியல் பரபரப்பு நிலவியது.
ஆளுநருடன் தொடர் சந்திப்புகள்
ஆட்சியமைக்க உரிமை கோரி கடந்த புதன்கிழமை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை விஜய் முதன்முதலில் சந்தித்தார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் போதிய ஆதரவு கடிதங்கள் இல்லாததால் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து ஆளுநரை அடுத்தடுத்த நாட்களில் நான்கு முறை சந்தித்து, தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
கைகொடுத்த திமுகவின் கூட்டணிக் கட்சிகள்!
ஆட்சியமைக்கத் தேவையான ‘மேஜிக்’ எண்ணான 118-ஐ எட்ட, விஜய் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்:
காங்கிரஸ்: 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை முதலில் வழங்கியது.
இடதுசாரிகள்: சிபிஐ (CPI) மற்றும் சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களுடன் ஆதரவு தெரிவித்தன.
திருமாவளவனின் விசிக: நேற்று விசிக தனது ஆதரவை உறுதிப்படுத்தியதன் மூலம் ஆதரவு எண்ணிக்கை 118-ஐ எட்டியது.
ஐயுஎம்எல் (IUML): 2 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட இக்கட்சியும் ஆதரவு அளித்ததால் விஜய்யின் பலம் 120 ஆக உயர்ந்தது.
இன்று பதவியேற்பு விழா
நேற்று (மே 9, 2026) மாலை ஆளுநரைச் சந்தித்த விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், விஜய்யை முதலமைச்சராக நியமித்து உத்தரவிட்டார். மேலும், மே 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை விஜய் நிகழ்த்தியுள்ளார். “மக்களுக்கான புதிய பாதை” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக் கட்டிலில் அமரும் விஜய்யின் நிர்வாகம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவலுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.
