சென்னை,மே.11; சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 10, 2026) நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சாதனை படைத்துள்ளது. 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய சிஎஸ்கே, இளம் வீரர் உர்வில் படேலின் சாதனை அரை சதத்தால் வெற்றியை வசப்படுத்தியது.
லக்னோவின் இமாலய இலக்கு
பூவா தலையா வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் செய்த லக்னோ அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் இங்லிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வெறும் 33 பந்துகளில் 85 ரன்கள் குவித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 220 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜேமி ஓவர்டன் (3/36) மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.
உர்வில் படேலின் சாதனை ரன் வேட்டை
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் (28) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (42) நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால், மூன்றாவது வீரராக களமிறங்கிய உர்வில் படேல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
அவேஷ் கான் வீசிய ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசிய அவர், வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக அரைசத சாதனையை (யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து) சமன் செய்தார். உருவில் படேல் 23 பந்துகளில் 65 ரன்கள் (8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) எடுத்து அவுட்டானபோது, சிஎஸ்கே வெற்றியை நெருங்கி இருந்தது.
பரபரப்பான கடைசி நிமிடங்கள்
ஆட்டத்தின் இறுதியில் லக்னோ பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. எய்டன் மார்க்ரம் வீசிய அந்த ஓவரில், ஷிவம் தூபே தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசி சிஎஸ்கே-வை வெற்றிப் பாதையில் நடைபோட வைத்தார். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 180 ரன்களுக்கு மேலான இலக்கை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வெற்றிகரமாக எட்டிப் பிடித்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முன்னேற்றம்
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், இந்த தோல்வி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. உர்வில் படேலின் இந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
