சென்னை,மே.20; தமிழ்நாட்டில் 2025-2026-ம் கல்விய ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20, 2026) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இதன் மூலம் நிறைவடைந்துள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எளிய முறையில் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளைப் பயன்படுத்தலாம்: www.tnresults.nic.in www.dge.tn.gov.in results.digilocker.gov.in
மதிப்பெண்களைச் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள்:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.முகப்புப் பக்கத்தில் உள்ள “TN SSLC Result 2026” என்ற லிங்கை கிளிக் செய்யவும். உங்கள் தேர்வுப் பதிவெண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றைச் சரியாக உள்ளிடவும். பின்னர் ‘Submit’ பொத்தானை அழுத்தினால், உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.
பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுப்பது எப்படி?
அதனைப் பதிவிறக்கம் (Download) செய்து, எதிர்காலத் தேவைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் (SMS) மற்றும் பள்ளிகள் மூலம் அறியும் வசதிஇணையதள நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு நேரடியாக குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
இதுதவிர, தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் முடிவுகள் உடனுக்குடன் வந்து சேரும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கும் நேரில் சென்று தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்ச்சி விகிதம் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆகப் பதிவாகியுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.15% ஆகவும் உள்ளது. அரசுப் பள்ளிகளும் 91.86% தேர்ச்சி பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளன.
மாவட்ட வாரியாக
புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
மாணாக்கரின் அடுத்தகட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களின் அடுத்த கட்ட உயர்கல்விப் பயணத்தைத் தொடங்கவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் சோர்வடையாமல், அடுத்து வரவிருக்கும் துணைத் தேர்வெழுதி (Supplementary Exam) வெற்றி பெற தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
