Skip to content

‘அமெரிக்காவில் இருந்தாலும் கொன்றுவிடுவோம்’: ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு கொலை மிரட்டல்!

டெல்லி,மே.23; இந்தியாவில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற நையாண்டி அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மூலம் வந்த அதிர்ச்சி மிரட்டல்

தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 30 வயதான அபிஜித் திப்கே, தனக்கு வந்த மிரட்டல் குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளை தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தி மொழியில் அனுப்பப்பட்ட ஒரு செய்தியில், “சொல்வதைக் கேள், இந்த கணக்கை (Account) மூடுவதற்கு உனக்கு பணம் தரப்படும். இல்லையென்றால், நீ அமெரிக்காவில் இருந்தாலும் உன்னை எங்களால் கொலை செய்ய முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், “உன்னுடைய எண் எங்களிடம் உள்ளது. உனது வீட்டைக் கண்டறிய எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது” என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நீட் (NEET) தேர்வுக்கு எதிரான பரப்புரையே காரணமா?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஒரு ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தை ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இந்த கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த ஆன்லைன் பரப்புரைக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து, குறுகிய காலத்திலேயே 2.79 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்றால் என்ன?

கடந்த 15ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கின் விசாரணையின் போது, சமூக அமைப்புகளைத் தாக்கும் சில இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ (Cockroaches) மற்றும் ‘சமூக ஒட்டுண்ணிகள்’ என்று விமர்சித்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. (பின்னர் தலைமை நீதிபதி, தான் ஒட்டுமொத்த இளைஞர்களையும் குறிப்பிடவில்லை என்றும், போலி சான்றிதழ்களுடன் வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைபவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் விளக்கமளித்தார்).

தலைமை நீதிபதியின் கருத்துக்கு பதிலடி தர நையாண்டி எக்ஸ் பக்கம்

தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அபிஜித் திப்கே ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு நையாண்டி தளத்தைத் தொடங்கி, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வெளியிட்டார். இது இந்திய இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா போன்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ட்ரெண்டிற்கு ஆதரவளித்தனர்.

முடக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு

இந்த கணக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், “தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” இருப்பதாக உளவுத்துறை (Intelligence Bureau) அளித்த பரிந்துரையின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69(A)-ன்கீழ் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கை இந்தியாவில் முடக்கியது. கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபிஜித் “காக்ரோச் இஸ் பேக்” (Cockroach is Back) என்ற புதிய கணக்கைத் தொடங்கி தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகிறார்.

நையாண்டி செய்தால் கொலை மிரட்டலா?

மக்களாட்சியில் நையாண்டி (Satire) மற்றும் விமர்சனங்கள் மூலமாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது இளைஞர்களின் உரிமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு சமூக வலைத்தள ட்ரெண்டிற்காகவும், கல்வித்துறை சார்ந்த போராட்டத்திற்காகவும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு இந்திய இளைஞருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பேச்சுரிமை மற்றும் தனிநபர் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *